Tuesday, April 10, 2012

பன்றிக் காய்ச்சலை தடுப்பது எப்படி?


பன்றி காய்ச்சல் என்றாலே இன்று ஒரு பீதியை கிளப்புகிறது. ஒருவருக்கு காய்ச்சல் என்றாலே சிந்தை பன்றியைத்தான் நினைவுபடுத்துகிறது. பன்றியைக் கண்டால் எல்லோரும் விலகி செல்வோம், பன்றி காய்ச்சல் வந்தால் , அதுவே விலகி செல்ல மருத்துவரைத்தான் அணுகவேண்டும். ஆனால் பன்றிக்காய்ச்ச்சலும் பன்றிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் , பன்றிடம் இருந்து வெளிப்படும் வைரஸை ஒத்த வைரஸ் என்றே பன்றிகாய்ச்சல் பெயர் காரணம் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
இன்ப்ளுயென்சா என்றழைக்கப்படுவது சாதாரண குளிர் காய்ச்சல் தான். வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய் இது. ஒவ்வொரு ஆண்டும் இது ஏற்பட்டாலும், ஆண்டுக்கு ஆண்டு சற்றே வித்தியாசப்படுகிறது.20 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த வைரஸ் உருமாற்றம் பெற்று, அதிக வீரியம் அடைகிறது. அப்போது வேகமாகப் பரவி, உலகளவில் தொற்று ஏற்பட்டு, அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. கடந்த ஆண்டு, எச்1என்1( H1N1 )    வைரஸ் தொற்று ஏற்பட்டதே; அது, இது போல் உருவானது தான். பறவைகள், பன்றிகளிடம் தோன்றிய இந்த தொற்று, ஒன்று என்ற நிலையிலிருந்து, அதிவேகமாகப் பரவும் தொற்றாக, எட்டாம் நிலைக்கு முன்னேறி விட்டது என, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டம் பரவும் அதிதீவிரமான வைரசாக இது உருமாறி விட்டது என, இந்த மையம் அறிவித்தது. இந்த மையம் அச்சம் கொண்டதற்கேற்பH1N1  வைரஸ் உலகம் முழுவதும் பரவி விட்டது.தொற்று பரவும் பூகோள அமைப்பின் மையப் பகுதியில் இந்தியா உள்ளது. எனவே, இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்த தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. பன்றிக் கறி சாப்பிட்டாலோ, பன்றிகளைத் தொடுவதன் மூலமோ இந்த நோய் வருவது இல்லை. ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாக இந்நோய் பரவுகிறது.
இருமல், தும்மல், எச்சில் துப்புதல் ஆகிய செயல்களின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. ஒரு தும்மலுக்கு 40 நீர் துளிகள் வெளிவருவதால், அதிலிருந்து தொற்று பரவுகிறது. இந்த துளிகள், தரைகளில், சுவர்களில், கதவுகளில், கைப்பிடிகளில், காசுகளில் என, மனிதன் பயன்படுத்தும் அனைத்து பகுதிகளிலும் படர்கிறது. கையைச் சுத்தம் செய்யாவிட்டால், ஒருவர் கையிலிருந்து அடுத்தவருக்குப் பரவி விடுகிறது.
அதிக சூடு மற்றும் புற ஊதாக் கதிர்கள், 5 முதல் 15 நிமிடத்தில் இந்த வைரசை அழிக்கின்றன. ஆனால், சளியுடன் கலந்து வெளியாகும் இந்தக் கிருமி, 48 மணி நேரம் வரை உயிர் வாழும். அதிக மக்கள் புழங்கும் இடங்கள், காற்று குறைவான இடங்கள், வெயில் படாத இடங்களில், இந்தக் கிருமி வேகமாகப் பரவும். தொற்று ஏற்பட்டிருக்கும் ஒருவரின் அருகில் செல்லும் மற்றொருவருக்கு, 2 – 3 நாட்களில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படத் துவங்கும்.
சாதா சளி போல உருவாகும் இந்தத் தொற்று, சோர்வு, காய்ச்சல், தலைவலி, மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவந்து தண்ணீர் வழிதல், தசைகளில் வலி ஆகியவற்றுடன் தீவிரமடையும். அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களுக்கு, எட்டு நாட்கள் இது தொடரும். அதன் பிறகு, முற்றிலுமாக குணமடைந்து விடும். நோயை பரிசோதனை செய்து கண்டறிய வேண்டும். சாதா குளிர் காய்ச்சலுக்கும்H1N1  காய்ச்சலுக்கும் அறிகுறிகள் ஒன்றே. தொண்டை மற்றும் மூக்கில் உள்ள திரவங்கள் வழித்தெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பரிசோதனைக் கூடங்களில் இந்த பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். இந்தக் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்க மருந்துகள் கொடுக்கப்படும்.  உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். டாக்டரின் பரிந்துரை இன்றி மருந்துகளை சாப்பிடக் கூடாது. நோய் வருமுன் தடுக்கும் வகையில் மருந்தை உட்கொள்ளலாம் என்று கருதலாகாது. தொற்று இருந்தால் மட்டுமேமருந்து பலன் தரும். குழந்தைகள், 65 வயதைக் கடந்த முதியோர், கர்ப்பிணிகள், சிகரெட் புகைப்பவர்கள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், எச்.ஐ.வி., தொற்று உள்ளவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த தொற்று ஏற்பட்டால், அதிக சிக்கல் உண்டாகும்.
பாதிப்பு அதிகமானால், மாரடைப்பு, ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் செய லிழத்தல் ஆகியவை ஏற்படும். பல்லுறுப்பு செயலிழத்தல் ஏற்பட்டு, நுரையீரல் முற்றிலும் செயலிழந்து போகும்.
குளிர் காய்ச்சலை தடுத்து, அது பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
* நோயாளிகளை பார்த்த உடன், கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பணத்தை கையாண்ட பிறகு, ஒவ்வொரு முறையும் கை கழுவ வேண்டும்.
* கதவின் கைப்பிடிகளை, கிருமிநாசினி மூலம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
* வெளியில் செல்லும் போது, முகமூடி அணிய வேண்டும்.
* இருமல், தும்மல் ஏற்படும் போது, கைக்குட்டையால் மூக்கை, வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
* வெளியிடங்களில் எச்சில் துப்புவதை அறவே தவிர்க்க வேண்டும்.
H1N1  வைரஸ் நோய் தடுப்பு மருந்து உள்ளது. ஊசி வகை, மூக்கில் ஸ்பிரே போட்டுக் கொள்ளும் வகை ஆகியன உள்ளன. 2 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு, மூக்கு வழியே ஸ்பிரே செய்யலாம். 6 மாதக் குழந்தைகளுக்கு ஊசி மருந்தே போட வேண்டும். இரண்டுமே, சிறந்த வகைகள் தான்.
மூக்கு வழியே போடப்படும் தடுப்பு மருந்தால், பயன்கள் அதிகம். மூக்கில் உள்ள சளியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கிருமிகளும் அழிய வாய்ப்பு ஏற்படும். தடுப்பு மருந்து போட்டாலும், சிலருக்கு தொற்று ஏற்படலாம். ஆனால், அது குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்தும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த தொற்று, ஏப்ரல் மாதம் வரை தென்படும். எனவே, நோய் தடுப்பு மருந்து போட்டுக் கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment