Monday, May 28, 2012

வாழை பழத்தோல்------குடி தண்ணீரை சுத்தமாக்க உதவும்

குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை. வாழைப்பழ தோல் போதும். குடிநீரில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஒப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம்: இன்று குடிநீராக பயன்படும் தண்ணீர், காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் இரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு இரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன், நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.

இந்நிலையில், தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் சப்பாத்துக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீர் சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது, தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும், அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக்கொள்ளும். எவ்வித இரசாயனப் பொருட்களையும் சேர்க்கத் தேவையில்லை. தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளைவிட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. நல்ல ஆராய்ச்சி.
    பயனுள்ள பதிவு

    ReplyDelete